Introduction to Muslim Ladies Arabic College and Muslim Ladies Arabic College Managing Society - Kal Eliya
கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி / முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி முகாமைத்துவச் சங்கம் - அறிமுகம்
1. கல்லூரியின் சுருக்க
வரலாறு
1.1 கல்லூரியின் தோற்றம்
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில்
முஸ்லிம் மாணவிகளுக்கு பாடசாலைக் கல்வியோடு இணைந்ததாக அரபு மொழி மற்றும் மார்க்கக்
கல்வியைப் போதிப்பதற்காக உருவாக்கப்பட்ட முதல் கல்லூரி இதுவாகும். இக்கல்லூரி 10. 01. 1959 ஆம் ஆண்டு உள்ளூர்
மாணவிகள் 27 பேருடனும் ஓர்ஆசிரியருடனும் கல் எளிய அரசினர் முஸ்லிம் பாடசாலையில் மாலை நேர
வகுப்பாக ஆரம்பிக்கப்பட்டது. எகிப்து அல் அஸ்ஹர் சர்வகலாசாலையில் உயர்கல்வி கற்ற மாத்தறையைச்
சேர்ந்த காலஞ்சென்ற அஷ்ஷேக் முஹம்மது அலவி அபுல் ஹசன் அவர்களின் சிந்தனையில் இக்கல்லூரியின்
உருவாக்கத்திற்கான எண்ணக்கரு தோன்றியது. தான் திருமணம் முடித்து வசித்துக் கொண்டிருந்த
நாம்புளுவை ஊருக்கு அண்மையில் காணப்பட்ட வேவல்தெனிய, திஹாரிய, கல் எளிய ஆகிய ஊர்களைச் சேர்ந்த சமூகப் பற்றுள்ள நலன் விரும்பிகளின்
பங்குபற்றுதலுடன் இவ்வெண்ணக்கரு செயல் வடிவம் பெற்றது. காலம் சென்ற அல்ஹாஜ் எச். எல்.எம்.ஏ.
காதர் அவர்கள் வழங்கிய இரண்டு ஏக்கர் காணியில் 1960 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையின் பல பாகங்களில்
இருந்தும் வசூலிக்கப்பட்ட பணத்தினால் முதல் விடுதிக் கட்டிடம் அமைக்கப்பட்டது. அக்காலத்தில்
பதினாறு மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்பதற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
இலங்கையின் அரச பாடசாலைகளின் அமைப்பிலேயே மாணவர்களின் சீருடை முதல் ஏனைய ஒழுங்குகளும்
காணப்பட்டன.
1.2 கல்லூரியின் முதலாவது
நிர்வாக சபை உறுப்பினர்கள்
03.01.1960 ஆம் ஆண்டு 84 அங்கத்தவர்களுடன்
இக்கல்லூரியின் முதலாவது பொதுச்சபை நடாத்தப்பட்டு நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.
1. அல்ஹாஜ் எம். ஏ. எம்.
அபுல் ஹசன் ஜே.பி (தலைவர்- வேவல்தெனிய)
2. அல்ஹாஜ் எச். எல்.
எம். ஏ. காதர்(உப தலைவர்- கல் எளிய)
3.அல்ஹாஜ் ஏ. ஆர். எம்.
ஜூனைத்(உப தலைவர்- திஹாரிய)
4.அல்ஹாஜ் எம். ஏ. எம்.
சபியுதீன்(பொதுச் செயலாளர்-மாத்தறை)
5. மௌலவி எம். அலவி.அபுல்
ஹசன்(உப செயலாளர்- மாத்தறை)
6.அல்ஹாஜ் ஏ. எச். எல்.
ஏ சலீம்(பொருளாளர்- கல் எளிய)
1.3 கல்லூரி முகாமைத்துவ
சபையின் ஸ்தாபகத் தலைவர் அல் ஹாஜ் எம். ஏ. எம் அபுல் ஹசன் ஜே.பீ அவர்கள்.
முகாமைத்துவ சபையில் 1959 தொடக்கம் 1997 வரை சுமார் 38 வருடங்கள் ஸ்தாபகத் தலைவராக இருந்த இவர்கள் இந்நிறுவனத்தை மிகச்
சிறப்பாகக் கட்டி எழுப்பினார்கள்.
ஆரம்ப காலம் முதல் இலங்கையின் அரசியல் பிரமுகர்களுடன் நல்லுறவைப்
பேணி வந்துள்ளார்கள். முன்னாள் பிரதமர்களான மேதகு டி.எஸ். சேனாநாயக்க, மேதகு டட்லி சேனாநாயக்கா, முன்னாள் ஜனாதிபதிகளான
அதிமேதகு ஜே. ஆர் ஜயவர்த்தன, அதிமேதகு ஆர். பிரேமதாசா மற்றும் அமைச்சர்களான கலாநிதி பதியுதீன்
மஹ்மூத் அல்ஹாஜ் எம்.எச் முஹம்மத் உட்பட மேலும் பல அமைச்சர்களுடனும் மிக நெருங்கிய
தொடர்பை வைத்திருந்தார்கள்.
இதன் விளைவாக, கல்வி அமைச்சின் மூலம் கல்லூரிக்குத் தேவையான அரச உதவிகள் அனைத்தும்
பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 1962 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும்
அரச பரீட்சைகளுக்கு பாடசாலைப் பரீட்சாத்திகளாகவே தோற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.மேலும்
1962 ஆம் ஆண்டு இக்கல்லூரியில்
அனாதை இல்லம் (தாருல்யதீமாத்) ஆரம்பிக்கப்பட்டது.
1964ஆம் ஆண்டு இக்கல்லூரியின்
முகாமைத்துவச் சங்கம் அங்கீகரிக்கப்பட்டதொரு தர்மஸ்தாபனமாக நிதி அமைச்சின் கீழ் பதிவு
செய்யப்பட்டது. (gazette
No 13998 of 28.03.1964)1967 ஆம் ஆண்டு கல்லூரியின் அநாதை இல்லம், சமூக சேவை அமைச்சின்
கீழ் காணப்பட்ட சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.1973 ஆம் ஆண்டு குழந்தைகள்
பராமரிப்பகம் - தாருல் அத்பால் (infants home) ஆரம்பிக்கப்பட்டது.
வரக்காபொல-"மத்ரசதுல் ஹஸனாத்" அமைக்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு இலங்கையின்
அரசாங்கப் பாடசாலைகளுக்கு இலவசப் பாடநூல் வழங்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில் இக்கல்லூரிக்கும்
இலவசப் பாடநூல்கள் கிடைக்கப்பெற்று 2023ஆம் ஆண்டு வரை விநியோகம் நடை பெற்றது. (2024 ஆம் ஆண்டு தனியார்
மயப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே விண்ணப்பிக்காமலிருந்துள்ளார்கள்.
1984-ஆம் ஆண்டு இக்கல்லூரி
தன்னார்வத் தொண்டு நிறுவனமாக கம்பஹா மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குவைத் அரசாங்கத்தின் கீழ் இயங்குகின்ற பைத்துஸ்ஸகாத்
நிறுவனத்துடன் தந்தைமார்களை இழந்த அனாதைகளுக்கான விஷேட பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரி
அனுமதி கிடைக்காத பலநூறு அநாதை மாணவிகளுக்கான நிதி வழங்கும் திட்டமும் இத்துடன் அமுலுக்கு
வந்தது.
மிகச்சிறப்பான முறையில் துரிதமாக முன்னேறிக்கொண்டிருந்த இந்நிறுவனம்
முகாமைத்துவ சபை அங்கத்தவர் ஒரு சிலரின் தன்னிச்சையான செயற்பாடுகளால் நாட்டின் பேசுபொருளாக
மாறியதோடு பாராளுமன்றம் வரை அப்பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து இச்
சமூகச் சொத்து சரியான முறையில் பரிபாலிக்கப்படுவதற்கான சட்டரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
1997 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கல்எளிய
முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி முகாமைச் சங்கத்தின் முகாமைச் சபை கூட்டிணைத்தல் சட்டம்
1991. 12. 17 ஆம் தேதி பாராளுமன்றத்தில்
அத்தாட்சிப் படுத்தப்பட்டது. இதன்மூலம் கல்லூரியின் குறிக்கோள்கள்களுக்கு பாதுகாப்பு
வழங்கப்பட்டது.
அல்ஹாஜ் எம். ஏ. எம் .அபுல் ஹசன் ஜே.பி அவர்களின் காலத்தில்
கல்லூரி சகல விடயங்களிலும் அபிவிருத்தி அடைந்து காணப்பட்டது. அன்றைய நிர்வாக சபையிடம்
காணப்பட்ட அன்பு, நீதி, நேர்மை, பணிவு போன்ற சிறந்த
பண்புகளினூடாக கல்லூரி கட்டி ஆளப்பட்டது. இவர்கள் தமது வாழ்வின் அதிகமான நேரங்களை இக்கல்லூரிக்காக
அர்ப்பணித்திருக்கிறார்கள். சவுதி அரேபியா, குவைத், ஈராக் எகிப்து போன்ற வளைகுடா நாடுகளுடனான இவர்களது தொடர்பால்
கல்லூரி மற்றுமோர் அபிவிருத்தியை நோக்கி நகர்ந்தது.
கல்லூரி ஸ்தாபிக்கப்பட்ட காலம் முதல் முகாமைத்துவ சபைத் தலைவர்
மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களிலும் ஹஜ் யாத்திரைகளிலும் பல பிரமுகர்களைச் சந்தித்து
கல்லூரியின் முன்னேற்றத்துக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார்கள். அரபு மொழியை
அறியாத நிலையில், அன்றைய முகாமைத்துவச்
சபையின் பொதுச்செயலாளர் மௌலவி ஏ. ஆர். எம். ரூஹுல் ஹக் அவர்கள் மூலம் தயாரித்துக் கொடுக்கப்பட்ட
கல்லூரி பற்றிய தகவல்களை ஆங்கில மொழி மூலம் முடியுமான விதத்தில் எடுத்துக்கூறினார்.
அதன் விளைவாக இறைவனின் உதவியோடு அரபு நாடுகள் பெண் கல்விக்காகவும் அனாதை மாணவர்களின்
பராமரிப்பு, பாதுகாப்புக்காகவும்
தம்மால் முடியுமான செல்வங்களை வாரி வழங்கின. பெரும்பாலான அரபு நாடுகளுக்கு இலங்கை நாட்டில்
தனியான தூதரகங்கள் காணப்படாத 1960 களின் இறுதிப்பகுதியிலேயே மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளின் உதவியில்
கல்லூரியின் விடுதிக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. ஈராக் மண்டபத்தை நிர்மானிப்பதற்காக
அந்நாட்டின் மாண்புமிகு ஜனாதிபதி சத்தாம் ஹுசைன் அவர்களின் அனுசரணையில் 200 தொன் சீமெந்து நேரடியாகக்
கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அல்ஹாஜ் எம். ஏ. எம்.அபுல் ஹசன் ஜே.பி அவர்களுக்கிருந்த நன்
மதிப்பின் காரணமாக 1976 ஆம் ஆண்டு சவுதி
அரேபியா நாட்டின் மாண்புமிகு மன்னர் பைஸல் அவர்களை இவர நேரடியாகச் சந்தித்த வேளை அவர்கள்
இக்கல்லூரிக்கான நன்கொடைகளை வழங்கியுள்ளார்கள்.
இவ்வாறு வெளிநாடுகள் மாத்திரமன்றி உள்நாட்டிலும் இருந்த செல்வந்தர்கள்
இக்கல்லூரிக்காக தமது சொத்துக்களையும் செல்வங்களையும் வாரி வழங்கியுள்ளார்கள்.. இத்தகைய
அன்பளிப்புகள் மூலமாக கல்லூரி வளாகம் சுமார் 13 ஏக்கர்களை கொண்டதாக விஸ்தரிக்கப்பட்டு அதில் ஆயிரம் மாணவிகள்
தங்கிப் படிப்பதற்கான கட்டிடங்களும் ஏனைய பௌதீக வசதிகளும் செய்யப்பட்டன. நளீம் ஹாஜியாரின்
அன்பளிப்பில் கல்லூரி வளாகத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாடிக்கட்டிடம் இதற்குச்
சிறந்த உதாரணமாகும். மேலும் எதிர்காலத்தில் யாரிடமும் கையேந்தாது சொந்தமாக இயங்குவதற்காக
வருமானம் தரக்கூடிய பல கோடி ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் கொழும்பிலும் ஏனைய இடங்களிலும்
கொள்வனவு செய்யப்பட்டு கல்லூரியின் பெயரில் எழுதி வைக்கப்பட்டன.
இத்தகைய பெருமளவிலான சொத்துக்களையும் பௌதீக வளங்களையும் இக்கல்லூரிக்காக
பெற்றுக் கொடுத்ததைப்போன்று மாணவிகளின் உயர்கல்விக்கான வாய்ப்புகளையும் வெளிநாடுகளில்
உள்ள பல்கலைக்கழகங்களின் புலமைப் பரிசில் மூலமாகப் பெற்றுக் கொடுத்தார்கள். சவுதி அரேபியாவின்
ரியாத் நகரில் அமைந்துள்ள "குல்லிய்யத்துத் தர்பியா" எனப்படும் கல்வி யற்
கல்லூரிக்கு 1984 ஆம் ஆண்டு 10 மாணவிகளும் அதனைத்
தொடர்ந்து 05 மாணவிகளும் சென்றனர்.
இவ்வாறே எமது கல்லூரி மாணவிகள் மேலும் பல நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று
உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுத்தார்கள்.
கல்லூரி வரலாற்றில் பொற்காலம் என வர்ணிக்கப்படும் அளவுக்கு அருஞ்சேவை
செய்த சிறப்பானதொரு நிர்வாக சபைக்குத் தலைவராக இருந்த அல்ஹாஜ் எம். ஏ. எம்.அபுல் ஹசன்
ஜே.பி அவர்கள் 1997 ஆம் ஆண்டு தனது 92 ஆவது வயதில் வபாத்தானார்கள்.
1.4 கல்லூரி முகாமைத்துவ
சபையின் இரண்டாவது தலைவர் அல் ஹாஜ் ஏ.எச்.எல். ஏ. சலீம் அவர்கள்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்
திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்ட பதிலின் பிரகாரம், 1998.07.09 தினத்த தினத்தன்று கல்லூரியால்
திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்த புதிய
முகாமத்துவ சபை அங்கத்தவர்கள் பின்வருமாறு.
1. திரு. ஏ. எச். எல்.
ஏ சலீம்(தலைவர்
2. திரு. எம். சுபைர்(தற்காலிகத் தலைவர்)
3. திரு. எம். ஜமீல்(உப தலைவர்)
4. திரு. பாயிஸ் முஸ்தபா (உப தலைவர்
5. திரு.ஏ. எச். எம்.
கலீல்(பொருளாளர்)
6. திரு ஏ. ஆர். எம்.
ரூஹுல் ஹக்(பொதுச் செயலாளர்
7. திரு. எம். ரஹ்மான்
ஹஸன்(உறுப்பினர்)
சலீம் இங்கு கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர் அல்ஹாஜ் எம்.ஏ .எம்
அபுல்ஹசன் அவர்கள் வபாத்தானதும் நிர்வாக சபையின் பொருளாளராக இருந்த அல்ஹாஜ் ஏ. எச்.
எல். ஏ அவர்கள் நிர்வாக சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அன்னார் சில மாதங்கள்
மாத்திரமே தலைவராக இருந்த நிலையில் நோய்வாய்ப்பட்ட போது முகாமைத்துவ சபையின் சாதாரண
உறுப்பினர்களுள் ஒருவராகக் காணப்பட்ட அவருடைய மருமகன் அல்ஹாஜ் எஸ் ஏ சி எம் ஸுபைர்
அவர்கள் தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இக்காலப் பகுதியில் ஏற்றுக்
கொள்ளப்பட்ட யாப்பின் அடிப்படையிலான பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டு நிர்வாக சபைத் தெரிவு
இடம்பெறவில்லை. அவ்வாறு இல்லாவிட்டாலும் கூட ஏனைய நிர்வாகங்கள் மரபு வழியாகப் பின்பற்றுகின்ற
நடைமுறையேனும் பின்பற்றப் படவில்லை. இவ்விரண்டு முறைகளும் இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இங்கு பொருளாளராக இருந்த அல்ஹாஜ் ஏ. எச் எல் ஏ சலீம் அவர்கள் தலைவராகத் தெரிவு செய்யப்படுகின்ற
அதே வேளை அவர் நோய்வாய்ப்பட்டதும் மிகக்குறுகிய இடைவெளிக்குள் அவர்களது மருமகன் பதில்
தலைவராக்கப்படுகிறார். இரண்டு வருடங்கள் கடுமையான நோயுடன் படுக்கையில் காணப்பட்ட சலீம்
ஹாஜியாரின் "தலைவர்" பொறுப்பு அவர் மரணிக்கும் வரை வேறு ஒருவரின் கைக்குப்
போகாமல் "தற்காலிகம்" எனும் பெயரில் மருமகனிடமே இருந்திருப்பதும் தெட்டத்
தெளிவாகப் புலப்படுகின்றது. இங்கு ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட செல்வாக்கு உட்புகுத்தப்பட்டுள்ளதையும்
அவதானிக்க முடியும். இத்தகைய குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்த, நாற்பது வருடங்களுக்கு
மேலாக கல்லூரிக்காய் தன்னை அர்ப்பணித்த முகாமைத்துவ சபையின் அந்நாள் பொதுச் செயலாளர்
வீண் பழிகள் சுமத்தப்பட்டு அநியாயமான முறையில் நிர்வாகத்திலிருந்து மட்டுமல்லாமல் கல்லூரியிலிருந்தே
விலகிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார். அவ்வாறே ஏனைய ஸ்தாபகத் தலைவர்களின் குடும்ப
உறுப்பினர்களும் தூரமாக்கப்பட்டார்கள்.
1.5 முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்
திணைக்களத்தின் பணிப்பாளர் மூலம் 2018.04.16 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்ட முகாமைத்துவ சபையின்
யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரியின் நிர்வாக சபையின் பதவி தாங்குனர்கள்.
1. திரு. எம். சுபைர்(தலைவர்)
2. திரு. எம். பயாஸ்
சலீம்(தலைவர்)
3. திரு.நூர் முஹம்மத்
முஹம்மத் மிஃப்லி(கௌரவ செயலாளர்)
4. திரு. அப்துல் ஹமீத்
முஹம்மத் கலீல்(கௌரவ பொருளாளர்)
அநாதை இல்ல சிறுவர் பாராமரிப்புப் பிரிவின் 2019 -2022 வரையுள்ள காலப் பகுதிக்கான
புதுப்பிக்கப்பட்ட உடன்படிக்கைக்கிணங்க மேற்குறிப்பிடப்பட்டுள்ளவர்களுடன் கீழ்வருவோரும்
காணப்படுகின்றனர்.
5. திரு. ரிஷாத் சுபைர்(உறுப்பினர்)
6. திரு. ரூமி ரஹீம்(உறுப்பினர்)
1.6 கல்லூரியின் நிர்வாக
சபையின் மூன்றாவது தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஏ.சி.எம் ஸுபைர் (1999-2022)
ஸ்தாபகத் தலைவர் அல்ஹாஜ் எம். ஏ.அபுல் ஹசன் ஜே.பி அவர்களுக்கு
அடுத்ததாக மிகக் கூடிய காலமாக 23 வருடங்கள் தலைவராக இவர்கள் இருந்துள்ளார்கள். தனது மனைவியின்
தந்தையான அல்ஹாஜ் ஏ. எச். எல். ஏ சலீம் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து இவர்கள் தலைவரானார்கள்.
இந்த நிருவாக சபையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட யாப்பின் அடிப்படையில் இடம்பெறாமல் ஏற்கனவே
பின்பற்றப்பட்ட நடைமுறையைப் பின்பற்றியே அமைக்கப்பட்டுள்ளது.
தலைமைப் பொறுப்பு தவறிப்போய் விடாமலிருக்க, தனது மனைவியின் சகோதரனான
அல்ஹாஜ் ஃபயாஸ் சலீம் அவர்களுக்கு நகர்த்தப்படக்கூடிய முறையில் கடந்த காலங்களில் இரண்டு
உப தலைவர்கள் நியமிக்கப்பட்ட நடைமுறையை மாற்றம் செய்து ஒரேயொரு உப தலைவரை நியமித்து
தனக்குப் பின்னால் அவரிடம் தலைமைப் பொறுப்பு மாறாமல் கையளிக்கப்பட வேண்டும் எனும் திட்டத்தை
மிக நுணுக்கமாக மேற்கொண்டுள்ளார்கள். அவ்வாறே நிர்வாக சபையில் அவரது மகன் ரிஷாட் ஸுபைர்
அவர்களும் உறுப்பினராக உள்வாங்கப்பட்டுள்ளார்.
இவ்விஸ்தாபனத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட யாப்பின் அடிப்படையில்
நிர்வாக சபையின் கோரம் நான்கு (4) பேராகும். இத்தகைய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே
பெரும்பான்மை வகிப்பதனால் நிர்வாக சபைத் தீர்மானங்கள் மூலமாக அநீதியும் முறைகேடுகளும்
ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்பட்டன. நீண்ட காலம் பொதுச் செயலாளராக இருந்த அல்
ஹாஜ் முஹம்மத் மிஃப்லி அவர்கள், இவர்களின் பிழைகளைச் சுட்டிக்காட்டி நேர்மையற்ற, நீதியற்ற தீர்மானங்களுக்கு
எதிராகப் போராடியுள்ளார்கள். ஆயினும் இந்த ஒரே குடும்ப நிர்வாகிகள் யாருடைய கருத்தையும்
மதிக்காது ஆரோக்கியமும் தூரநோக்கும் அற்ற நடைமுறைகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இத்தகைய நேர்மையற்ற முறைகேடான நடவடிக்கைகளின் போதெல்லாம் கல்லூரியின்
வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்தவர்கள் கல்லூரியை விட்டும் விலகிச் செல்வதற்கு
நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களுள் சிலர் உதாரணத்திற்காக:-
1. Al Aalima
Naseema Jamaldeen (உப அதிபர் 1995)
2. Moulavi
A.R.M Roohul Haq (நிர்வாக சபை செயலாளர் 1999)
3. Al Aalima
Jaleela Shafeek (அதிபர் 2001)
4. Al Haj M.Hussain
(முகாமையாளர் 2004)
5.
Ash-sheikh Affan Abdul Haleem (பொது முகாமையாளர் 2022)
இதன் இறுதியாகக் கல்லூரியின் உத்தியோகபூர்வ அதிபர்Al Aalima Maheesa Nasrullah அவர்கள் மீது ஒரு
பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி பலவந்தமாக பிரதான வாயிற் கதவை மூடி கல்லூரிக்குள் நுழைய
விடாமல் தடுத்து வைத்துள்ளார்கள்.
2. கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டதன்
நோக்கம்
1. இலங்கை முஸ்லிம் மாணவிகளுக்கு
பாடசாலைக் கல்வியோடு இணைந்ததாக அரபு மொழி மற்றும் இஸ்லாமியக் கலைகளைப் படிப்பதற்கான
வாய்ப்பு இல்லாத குறையை நிவர்த்தி செய்தல்
2. நாட்டின் அரசாங்க
பாடசாலைகளில் அரபு மொழி மற்றும் இஸ்லாம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்குத் தகுதியான பெண்
ஆசிரியர்களை உருவாக்குதல்.
3. அனாதைகள் மற்றும்
வசதியற்ற மாணவிகள் தமது கட்டாயக் கல்வியினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வழி அமைத்தல்,
4. இலங்கையின் எல்லாப்
பகுதிகளிலும் சிறுபான்மையினராகப் பரவி வாழும் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் போதனைகளைச் சரிவர
விளங்கிக் கொள்ள வழி வகுத்தல்.
5. பாடசாலைக் கல்விக்கு
மேலதிகமாக, ஆன்மீகம் மற்றும்
வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வழி வகுத்தல்,
6. கல்லூரியை முகவரியாகக்
கொண்ட அனாதரவான குழந்தைகளின் கல்வி மற்றும் ஏனைய வாழ்வாதாரங்களை முழுமையாகப் பெற்றுக்
கொடுத்தல்.
7. முஸ்லிம் சமூகத்தின்
மேம்பாடு கருதி தேவைக்கேற்ப அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்தல்.
03. கல்லூரியின் சொத்துக்கள்
பதிவு செய்யப்படுதல் வேண்டும் என்பதின் ஊடாகஎதிர்பார்க்கப்படுவது:
1. இக்கல்லூரிக்காக தமது
பணத்தையும் சொத்துக்களையும் வக்ஃப் செய்தவர்கள் இவை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யப்படும்
எனும் நம்பிக்கையிலேயே அதனை வழங்கியுள்ளனர். எனவே அவற்றை உரிய முறையில் பாதுகாப்பது
மார்க்கக் கடமையாகும்.
2. கல்லூரியை வக்ஃப்
சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமால் இருப்பதன் விளைவாக அதன் சொத்துக்களுக்கு ஏற்படும்
இளப்பு மற்றும் பிழையான பயன்பாடு என்பவற்றை தடுத்து நிறுத்துதல்
3. அநாதைகளின் உடமைகள்
இங்கு பெருமளவில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவற்றைப் பாதுகாப்பது மார்க்கத்தின் மிக முக்கியமான
கடமையாகும்.
4. தனியார் கையாடல்களைத்
தவிர்த்தல். உதாரணமாக, இலாபமீட்டல் எனும்
பெயரில் முறையான அனுமதி பெறாமல் நிர்வாக உறுப்பினர்கள் தமது குடும்ப அங்கத்தவர்களிடமும், நெருங்கிய நண்பர்களிடமும்
சொத்துக்களையும் பணத்தையும் முதலீடு செய்வதை தவிர்த்தல்.
5. ஏழை எளியவர்கள், கணவன்மார்களை இழந்த
விதவைகள் போன்றவர்களின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான
வழிகளை யமைத்தல்.
6. கல்லூரியை முகவரியாகக்
கொண்டு வளரும் அநாதை மாணவிகளுக்கான வீட்டுத்திட்டங்களை உருவாக்குதல்.
7. எதிர்பாராத குடும்பப்
பிரச்சினைகள், இழப்புக்கள் போன்றவற்றுக்கு
முகம் கொடுக்கும் கல்லூரியால் திருமணம் முடித்து வைக்கப்பட்ட அநாதை மாணவிகள் மற்றும்
அவர்களின் குழந்தைகளுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்தல்,
8. வக்ஃப் சொத்துக்கள்
மூலம் கிடைக்கின்ற வருமானங்கள் தடைப்படும் போது கல்லூரியை நாடாத்துவதில் ஏற்படுகின்ற
சிரமத்தை தவிர்த்தல்,
9. இந்த சொத்துக்கள்
துஷ்பிரயோகம் செய்யப்படுவதன் மூலம் காலூரியின் அடிப்படை நோக்கங்களுக்கு மாற்றமாக புதிய
திட்டங்களை வகுத்து இலாபமீட்டக்கூடிய தனியார் நிறுவனமாக மற்றுவதற்குறிய முயற்சிகள்
முன்னெடுக்கப்படாமல் பாதுகாத்தல்.
10. இவற்றின் வருமானங்களைக்
கொண்டு மேலும் பல கல்வி, சமூக அபிவிருத்தித்
திட்டங்களை முன்னெடுத்தல்.
4. முஸ்லிம் மகளிர் அரபுக்
கல்லூரி முகாமைத்துவ சபையின் பெயரில் காணப்படும் சொத்துக்கள் பற்றி நாம் அறிந்த விடயங்கள்.
4.01 கல்லூரி அமைந்திருக்கும்
காணி.
1. இரண்டு ஏக்கர் காணி
அல்ஹாஜ் H.L.M.A.காதர் அவர்களால் 1958 ஆம் ஆண்டு அன்பளிப்புச்
செய்யப்பட்டது.
2. அக்காணியின் அருகாமையில்
இருந்த ஆரம்ப கால கல்லூரியின் சமையலறையாக பயன்படுத்தப்பட்ட வீடும், 3/4 ஏக்கர் காணியும்
ஜனாப் மக்கீன் அவர்களிடம் இருந்து 1965 இல் வாங்கப்பட்டது.
3. திரு. எரிக் பெரேரா
என்பவரிடமிருந்து 2 ஏக்கர் காணி வாங்கப்பட்டது.
அத்துடன் ஒரு பகுதி அவரால் அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டது.
(தற்போதைய காதர் மண்டபம், ஜித்தா மண்டபங்கள்
அமைந்துள்ள இடம்)
4. பத்து வருட குத்தகைக்கு
பெறப்பட்டிருந்த ஜனாப் முஹம்மத் இப்ராஹிம் அவர்களின் சுமார் ஒரு ஏக்கர் காணியும் வீடும்
ரூ. 30000/க்கு வாங்கப்பட்டது.
(தற்போதைய IDB கட்டிடம் அமைந்துள்ள
இடம்.)
5. முஸ்தபா ஹாஜியாரின்
ஒரு ஏக்கர் 20 பேர்ச் காணியும்
வீடும் ரூ. 77000/ க்கு வாங்கப்பட்டது.
(தற்போதைய கம்பளை மண்டபம்
அதற்குப் பின்னால் உள்ள கட்டடம் கம்பளையைச் சேர்ந்த மாணவிகள் சிலரின் பெற்றாரின் அன்பளிப்பால்
கட்டப்பட்டது)
6. கல்லூரிக்கு முன்புறமாகவுள்ள
ஜனாப் U.H. அப்துல் காதருக்குச்
சொந்தமான 1/4 ஏக்கர் காணி ரூ.
14,000/-க்கும், ஜனாப் U.L.கரீம் அவர்களுக்குச்
சொந்தமான 1/4 ஏக்கர் காணி ரூ.14,000/க்கும் வாங்கப்பட்டன.
(தற்போதைய வாகனத் தரிப்பிடம்)
7. அல்ஹாஜ் H.L.M.A காதர் அவர்களால் அன்பளிப்புச்
செய்யப்பட்ட காணிக்கு அருகாமையில் உள்ள 1/4 ஏக்கர் நிலம் ரூபாய் 6250/ க்கு வாங்கப்பட்டது.
8. ஜனாப் U.L.கரீம் அவர்களுக்குச்
சொந்தமான 30 பர்ச் காணியும் வீடும்
ரூ.200,000/-க்கு வாங்கப்பட்டன.
9. முஸ்தபா ஹாஜியாரின்
வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து ஜனாப் மரிக்கார் அவர்களால் கொள்வனவு செய்யப்பட்டிருந்த
ஜனாப் அப்பாஸ் அவர்களின் காணியும் ஜனாப் ஸமீன் அவர்களின் காணியும்(இரண்டும் சேர்ந்து
சுமார் 12 ஏக்கர் இருக்கலாம்)வாங்கப்பட்டன.
10. தற்போது, உதவி அதிபர் அல் ஆலிமா
பரீஸா ஆசிரியை வசிக்கும் விடுதியும் அதனுடன் இணைந்ததாகக் காணப்படுகின்ற அடுத்த விடுதியும், அவை அமைந்துள்ள காணியும்
ஜனாபா உம்மு ஸல்மாவிட மிருந்து வாங்கப்பட்டன. (இது சுமார் 1/4 ஏக்கர்)
11. தற்போது ஆசிரிய ஆசிரியைகளின்
விடுதிகளாகப் பயன்படுத்தப்படும் பாரூக் ஆசிரியர், ஜனாப் ஹூசைன் ஆகியோருக்குச் சொந்தமான வீடும் சுமார்
1/2 ஏக்கர் காணியும்
வாங்கப்பட்டன.
12. தற்போதைய நியூ ஜித்தா
மண்டபத்துக்கு அருகே. பின்புற வாயிற்கதவுடன் இணைந்ததாக உள்ள ஜனாப் அபூஹனிபாவுக்குச்
சொந்தமான 2 1/2 ஏக்கர் வயல் காணி
70 லட்சத்துக்கு வாங்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட காணிகளில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 2 ஏக்கர் காணி தவிர்ந்த
மற்ற அனைத்தும்,கல்லூரிக்கு நன்கொடையாகக்
கிடைத்த பணத்தால் வாங்கப்பட்டவையே. யாருடையவும் சொந்தப் பணத்தால் வாங்கப்பட்டவை அல்ல
என்பதும் கல்லூரியின் சொத்து என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.
4.2 கல்லூரிக் காணியில்
அமைந்துள்ள கட்டடங்கள்.
1. நளீம் மண்டபம்
(இருமாடிக் கட்டடம்) அல்ஹாஜ் M.I.M.நளீம் அவர்களின் அன்பளிப்பால்
கட்டப்பட்டது.
2. ஈராக் மண்டபம்
ஈராக் நாட்டின் உதவியால் கட்டப்பட்டது. ஈராக் ஜனாதிபதி 200 தொன் சிமெந்தியை
இதற்காக அன்பளிப்புச் செய்தார்.
3. குவைத் மண்டபம்.
குவைத் நாட்டின் தூதுவர் வழங்கிய அன்பளிப்பு மூலம் இது கட்டப்பட்டது.
4. அரூஸ் மண்டபம்
தைக்கா சுஐப் ஆலிம் அவர்களின் அன்பளிப்பினால் இது கட்டப்பட்டது.
5. மேமன் மண்டபம்.
ஜனாப் அஹ்மத் பைலா அவர்களின் முயற்சியால் அவர் அங்கம் வகித்த
மேமன் குழு வழங்கிய அன்பளிப்பால் கட்டப்பட்டது.
6. ஜித்தா மண்டபம்
சவுதி அரேபியா, ஜித்தாவைச் சேர்ந்த கொடை வள்ளல் சாலிஹ் அல் அமுதீ குடும்பத்தின்
அன்பளிப்பால் கட்டப்பட்டது.
7. ஜமால் மண்டபம்
குவைத்தைச் சேர்ந்த பத்ர் ஜமால் நாஸிர் அர்ருமைஹ் என்பவரின்
மகனின் ஞாபகார்த்தமாக அவரின் அன்பளிப்பால் கட்டப்பட்டது.
8. கம்பளை மண்டபம்
கல்லூரியால் வாங்கப்பட்ட முஸ்தபா ஹாஜியாரின் வீட்டின் இணைப்பாக
கம்பளையைச் சேர்ந்த சில தனவந்தர்களின் அன்பளிப்பால் கட்டப்பட்டது.
9. IDB மண்டபம் ஜித்தாவிலுள்ள
இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் அன்பளிப்பினால் கட்டப்பட்டது.
10. எமிரேட்ஸ் மண்டபம்.
நோயாளர் பராமரிப்பு நிலையம், பற்சிகிச்சைக்கான உபகரணங்களைக் கொண்ட பற்சிகிச்சை
நிலையம், 50 ஆயிரம் லீற்றர் கொள்ளளவு
கொண்ட நீர்த்தாங்கி,
நீர் சுத்திகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு தொகுதி ஆகியவற்றுடன் ஓர் ஆழ்கிணறு
என்பன ஐக்கிய அரபு ராஜியத்தின் பல நலன்புரி அமைப்புக்களின் அன்பளிப்புக்களால் நிர்மாணிக்கப்பட்டவையாகும்.
11. பைத்துஸ்ஸகாத் மண்டபம்.
குவைத்திலுள்ள ஸகாத் நிறுவனம், அவர்களால் பொறுப்பேற்கப்
பட்ட பிள்ளைகள் வதிவதற்காகக் கட்டிக் கொடுக்கப்பட்டது.
12. கல்லூரியின் சாப்பாட்டறையும்
சமையலறையும்
கல்லூரி நிர்வாக சபையின் வெளிநாட்டு உறுப்பினர்களாயிருந்த அஹ்மத்
அல் அமூதி, பாதவீல் ஆகிய இருவரின்
குடும்ப உறுப்பினர்களின் அன்பளிப்பால் கட்டப்பட்டது.
அதனோடு மேலும் 100 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய ஒரு பகுதி சவுதி அரேபிய Islamic Solidarity Fund இன் அன்பளிப்பால்
கட்டப்பட்டது.
13. ஸறூணி மண்டபம்.
துபாய் நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் முஹம்மத் ஸாலிஹ் ஸறூணி
என்பவரின் அன்பளிப்பால் கட்டப்பட்டது.
14. பிரதான மண்டபத்துக்கு
முன்னால் உள்ள ஆறு வகுப்பறைகளும்தனவந்தர்கள் ஆறு பேரின் அன்பளிப்புகளால் கட்டப்பட்டவை.
15. தற்போதைய ஆசிரியர்களின்
அறை கல்லூரியின் ஆசிரியையும் பழைய மாணவியுமான ஸாஹிரா ஆபிதீன் அவர்களின் அன்பளிப்பால்
புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
16. பள்ளிவாயில் அதற்கு
மேல் உள்ள நூலகம், செயற்பாட்டு மண்டபம்
உட்பட்ட கட்டடத் தொகுதி குவைத் ஸகாத் நிறுவனத்தின் அன்பளிப்பால் கட்டப்பட்டது.
17. கணிணிக்கூடம், போட் ரூம், விசேட விருந்தினர்
தங்கும் அறை உட்பட்ட கல்லூரியின் கார்யாலயத் தொகுதி ஜித்தா மண்டபத்தை அமைக்க உதவி வழங்கிய
ஸாலிஹ் அமூதி அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அன்பளிப்பால் கட்டப்பட்டது.
18. பிரதான மண்டபத்துக்குப்
பக்கத்தில் உள்ள வகுப்பறைத் தொகுதியும் மேற்குறிப்பிட்ட ஸாலிஹ் அமூதி அவர்களின் குடும்பத்தினரின்
அன்பளிப்போடு, கல்லூரிப் பணமும்
சேர்த்துக் கட்டப்பட்டது.
19. அண்மையில் கட்டப்பட்ட
5 மாடிக் கட்டடம் குவைத்
அரசாங்கத்தின் அவ்காப் அமைச்சின் அன்பளிப்பாகும்.
4.3 கல்லூரி வளாகத்துக்கு
வெளியிலும் ஏனைய பகுதிகளிலும் காணப்படும் சொத்துக்கள்.
1. ஸேர் ராஸிக் பரீத்
அவர்கள்அன்பளிப்புச் செய்த
பம்பலபிட் டியில் உள்ள அரை ஏக்கர் காணி,
2. 965, கொட்டாரோட் ராஜ கிரியவில்
உள்ள கட்டடம்.
3. கொழும்பு, ப்Bளூ மெண்டல் வீதி.
ஏழாம் ஒழுங்கை 36-ஆம் இலக்கத்தில் உள்ள
கட்டிடம்.
4. கல்எளிய நகரத்தில்
உள்ள 51 பேர்ச் காணி (தற்போது
தபால் கார்யாலயமும் டிஸ்பென்சரியும் அமைந்துள்ள இடம்)
5. 955/1,
955/2 கொட்டாரோட் ராஜகிரியவில் ஒரு ஏக்கர் 20 பேர்ச் காணி.
(இவை விற்பனை செய்யப்பட்டு
சதம் வீதியில் உள்ள "மரிக்கார் பாவா கட்டடம்"வாங்கப்பட்டது.
6. டி.பி. ஜாயா மாவத்தையில்
உள்ள 421 ஆம் இலக்க இருமாடிக்
கட்டிடம்.
7. பம்மண்ணையில் ஒரு
ஏக்கர் 23 பேர்ச் காணி.
8. கொழும்பு கொட்டாஞ்சேனையில்
சென்ட் பெனடிக்ட் மாவத்தையில் உள்ள காணி.
9. குருணாகலை மாவட்டத்தின்
ஹொறம்பாவை இல் உள்ள 100 ஏக்கர் 3 ரூட் 20 பேர்ச் தென்னந்தோட்டம்.
10. கம்பளையில் ஜனாப்
உமர் பாட்சா அவர்களால் வழங்கப்பட்ட கடைத்தொகுதி.
11. கொழும்பு மீராணியா
வீதியில் உள்ள (28வீடுகளைக் கொண்ட வீட்டுத்தொகுதி.)
12. கள்எலிய, ஸலீம்புர யில் உள்ள
அனாதைப்பிள்ளைகள் மூவருக்கு.வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்ட
காணியுடன் இணைந்த சுமார் 1/2 ஏக்கர் காணி.
இது தவிர பேலியகொட சேதவத்த கொஹிலவத்த போன்ற இடங்களில் உள்ள மிகப்
பெருமதிவாய்ந்த கட்டிடங்கள் ( இவற்றுள் சில விற்கப்பட்டுள்ளதாகவும் அறிந்தோம்)
5. நிறுவனத்தின் சமகால
நிலை
முகாமைத்துவ சபைத் தலைவர் அல் ஹாஜ் எஸ்.ஏ.சீ.எம் சுபைர் அவர்கள்
15.04.2022 ஆம் திகதி வெளிநாட்டுக்கு
செல்லும் போது முகாமைத்துவ சபைக்குள் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் அவற்றை முடியுமான
விதத்தில் சீர் செய்வற்காக பலரும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். தலைவரின் வெளிநாட்டுப்பயணத்துடன்
பலவந்தமாக கல்லூரிக்குள் ஊடுருவிய சட்டரீதியற்ற நபர்கள் அங்கிருந்த பொது முகாமையாளரை
அநியாயமாக வெளியேற்றிவிட்டு அதிகாரத்தை கையிலெடுக்கும் வழிகளை படிப்படியாக முன்னெடுத்தனர்.
இவர்களின் செயற்பாடுகளால் கல்லூரியின் சீரான ஓட்டம் ஆட்டம் காணத்தொடங்கியது. கல்லூரி
மாணவிகளின் கல்வி. ஒழுக்கம். பண்பாடு, பாதுகாப்பு என்பன சீரகுழைந்து காணப்பட்டன. 11.08,2022 தலைவரின் மரணத்தைத்
தொடர்ந்து நிலைமை மேலும் மோசமடைந்தது.
கல்லூரியின் மோசமான நிலைமைகளை சீர் செய்ய முயன்ற பழைய மாணவிகள்
அனைவரும் எந்தக் காரணமும் இன்றி எதிரிகளாகப் பார்க்கப்பட்டனர். யாப்பினடிப்படையில்
புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவதனூடாக கல்லூரியை சீர் செய்யலாம் என்று யோசித்த
பழைய மாணவிகள் உற்பட பெற்றார்கள், ஊர் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் என பல மட்டங்களிலிருந்தும் அனைவரும் ஒன்றிணைந்து
சினேகபூர்வமாக மேற்கொண்ட முயற்சிகள் யாவும் பயணளிக்காமல் போயின. கல்லூரியின் பிரதான
வாயிலில் "இது ஒரு தனியார் சொத்து " என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டது. இதனூடாக
சட்டரீதியற்ற நிறுவாகக் குழுவினரின் உள் நோக்கம் வெளிப்பட்டது. தமது நோக்கத்தை அடைந்து
கொள்வதற்காக காலாகாலமாக கஷ்டப்பட்டு ஸ்தாபகத் தலைவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்ட வரப்பிரசாதங்களை
இல்லாமலாக்க முயற்சித்தனர். கல்லூரியின் பதிவுகள் ஏனைய சலுகைகள் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமல்லாமல் தமக்கு வாய்ப்பாக பொருத்தமற்ற முறையில் நியமனங்களை வழங்கியதோடு, அவர்களது அநியாயங்களுக்கு
ஆதரவில்லாதவர்களை எதிர்த்தனர். காசாளர்களின் ஆதரவோடு பொது நிதியை தொடர்ந்தும் துஷ்பிரயோகம்
செய்தனர்.
நாளுக்குநாள் மோசமடைந்து கொண்டிருந்த இந்த நிறுவனம் மீண்டும்
அதன் சிறப்பு நிலையை அடைய வேண்டும், இத்தகையவர்களின் பிடியிலிருந்து விடுபட்டு கல்லூரி யாப்பின்
அடிப்படையில் சட்டரீதியான நிருவாக சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதனூடாக கல்லூரியை
மீளொழுங்கு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக முகாமைத்துவ சபையின் பொருளாளர், பொதுச் செயலாளர் உட்பட
பழைய மாணவிகள் பெற்றோர்கள் இணைந்து சட்டரீதியற்ற முகாமைத்துவ சபைக்கு எதிராக 19.05.2023 அத்தனகல்ல மாவட்ட
நீதி மன்றத்தில் வழக்கொன்றை (776/ SPL) தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு நிறைவடைவதற்குள் தடை உத்தரவுகளையும் மீறி காசாளர்களின்
உதவுயோடு வேண்டுமென்றே கல்லூரியின் சொத்துக்களுக்கும் ஏனைய விவகாரங்களுக்கும் பாதிப்புக்களை
விளைவிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனவே, அதிகூடிய விரைவில் இந்த சமூசு சொத்தை வக்ஃப் சபையில் பதிவு செய்து
அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குமாறு சமூகம் சார்பாக வேண்டிக் கொள்கிறோம்.